என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

செவ்வாய், 18 அக்டோபர், 2011

காதல் கொள்ளுங்கள்

காதல் கொள்ளுங்கள்
அவதாரங்கள் எடுப்பீர்
உணர்வுக்குள் அழகை உணர்வீர்
மொழியின் மேல் காதல் கொள்வீர்
இன்னொரு இதயம் உருவாகும்
அதுவும் சிறகு விரிக்கும் !

கனவுக்குள் கனவு மெய்ப்படும்
ஐம்புலன்களும் சிரிக்கும் அழும் !
ஆதலினால், தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !

எந்த வயதிலும் சிலிர்ப்பை சுகிப்பீர் !
விழித்து இருக்கையில் கனவுகள் விளையும்
உறக்கத்தில் உயிர்ப்பறவை சிறகடிக்கும்
உயிர் பிரிந்திடும் வேளையிலும்
இனிமை கொட்டும் !

சமூக சிறைகளை உடைத்திட சக்தி கொள்வீர் !
முகங்களை தெளிவீர் !
சிந்தைக்குள் மயக்கம்
செலவின்றி நிலாப்பயணம் செல்வீர்

ஆகாயத்துள் பறந்து வர அவசர சிறகு
பனித்துளிக்குள் இனிய பிரவேசம் !

விழி இமையில் புல்விரிப்பும் பூந்தோட்டமும்
ஆதலினால், தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !

மனம் வானமாய் விரியும்
விழிப்படலத்துள் மேகம் மிதக்கும்
தேகம் சிலையாகும்
சிலை தேகமாய் சிலிர்க்கும் !

மௌனம் கூட ஆர்பரிக்கும்
வாழ்வின் முரண்கள் அரண்களாகும்
துயரிலும் இதயம் பஞ்சாகும் !

ஆதலினால்
வேண்டி நிற்பீர்
ஒரு வரம் - அடுத்த பிறவியிலேனும்
பிறந்திட வேண்டும் ...
" ஒரு தமிழனாய்" என ...

ஆதலினாலே ...

தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் ! தமிழ் மேல் காதல் கொள்ளுங்கள் !!!

1 கருத்து: